போலி வாடகை ரசீதுகளுக்கு வருகிறது ஆப்பு!
டெல்லி:வீட்டு வாடகை ரசீதில் இனிமேல் பான் (PAN) எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது.
தற்போது பெரும்பாலானோர் போலியான வாடகை ரசீதுகளைக் கணக்கில் காட்டி வருகின்றனர். இதனால் உண்மையான வாடகை தொகையை அவர்கள் தெரிவிக்காமல் ஏமாற்றுவதாக வருமான வரித்துறை கருதுகிறது.
வாடகைக்கு வீடுகளை விடுவோர் அந்த வாடகைத் தொகையையும் தங்களது வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதைக் காட்டுவதில்லை.
இப்படி இரு தரப்பிலும் உண்மையான தொகை மறைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் வாடகைக்கு வீடு விடுவோரும், வாடகை கட்டுவோரும் இனிமேல் தங்களது ரசீதில், பான் (PAN) எண் குறித்த விவரங்களைக் காட்டியாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வருமான வரி நிபுணர் கிரீஷ் அஹுஜா கூறுகையில்,
தங்களது ஊழியர் தரும் வாடகை ரசீதில் இடம் பெறும், வீட்டு உரிமையாளர் மற்றும் ஊழியரின் பான் (PAN) எண் விவரங்களை நிறுவனங்கள் பரிசோதிக்கும். இதன் மூலம் உண்மையான வாடகை விவரம் தெரிய வரும் என்றார்.
2007-08ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் படிவத்தில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் தங்களது பான் விவரங்களைத் தெரிவிக்குமாறு நிதித்துறை அமைச்சகம் கோரியிருந்தது. இந்த ஆண்டு இது ஆப்ஷனல் என்றாலும் கூட அடுத்த ஆண்டிலிருந்து கண்டிப்பாக இதைக் குறிப்பிட வேண்டும்.
எனவே வாடகைக்கு குடியிருப்போரும், வீட்டு உரிமையாளர்களும் இனிமேல் உண்மையான வாடகையைத் தெரிவித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைப் பணத்திற்கான ரசீதே தருவதில்லை என்று மாதச் சம்பளம் பெரும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் புலம்புகின்றனர்.
இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு, வீட்டு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் முறையாக ரசீதுகளைத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே பான் (PAN) எண் விவரங்கள் குறித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications