சென்னையில் அழகிரி: தா.கி கொலைவழக்கு குறித்து ஆலோசனை?
சென்னை:தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வரின் மகன் மு.க. அழகிரி சென்னை வந்துள்ளார். வழக்கு மாற்றம் குறித்து விவாதிக்கவே அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை உலுக்கிய சம்பவம் முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு. மதுரையில் தனது வீட்டருகே காலையில் வாக்கிங் சென்ற அவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கிருட்டிணன். எனவே அவரை அழகிரியின் ஆதரவாளர்கள்தான் கொன்று விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். எனவே வழக்கு மதுரையில் நடந்தால், நியாயம் கிடைக்காது, சாட்சிகளின் உயிர்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி முக்கிய சாட்சியான முத்துராமலிங்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றி அதிரடி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், மு.க.அழகிரி நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்தார். வழக்கு மாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவே அவர் சென்னைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications