கூட இருந்தே தொல்லை கொடுக்கும் யாரும்நமக்கு தேவையில்லை - ஆற்காடு வீராசாமி அதிரடி!
சென்னை:தோழைக் கட்சி என்ற பெயரில் கூடவே இருந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் கட்சிகள் நமக்குத் தேவையில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து நின்று 150 தொகுதிகளில் வெற்றி பெறும் தகுதி நமக்கு உள்ளது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி அதிரடியாக கூறியுள்ளார்.
![]() |
சென்னையில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆற்காடு வீராசாமி அதிரடியாக பேசினார். பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒரு பிடி பிடித்தார். கூடவே இருந்து தொல்லை கொடுக்கும் கட்சிகள் நமக்குத் தேவையில்லை, தனியாகவே நாம் போட்டியிடலாம் என்று ஆற்காடு வீராசாமி பேசியதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆற்காடு வீராசாமி பேசியதன் சாராம்சம்:
சட்டசபையில் பொன் விழா கண்ட முதல்வர் கருணாநிதி இன்று நிம்மதியாக இருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எந்த நல்ல திட்டத்தை அறிவித்தாலும், தோழமைக் கட்சிகளே அறிக்கை விட்டு தூங்க விடாமல் செய்கிறார்கள். தெரியாமல் செய்கிறார்களா என்று பார்த்தால் திட்டமிட்டேதான் செய்கிறார்கள்.
டைட்டானியம் திட்டத்தை தொடங்குவது குறித்து முடிவு செய்தபோது அனைத்துக் கட்சிகளும் கருத்து கேட்கிறோம் என்ற பெயரில், எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத அளவு, இதுதான் நாங்கள் தொடங்கவுள்ள தொழிற்சாலை என்று மக்களிடம் காட்டி அதன் பிறகு ஒப்பந்தமான தொழிற்சாலை இது. இதுவரை எந்த முதல்வரும் இப்படிச் செய்ததில்லை.
டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முதல்வர் ஒரு ஒப்பந்தம் செய்தாரே, அதை உங்களிடம் காட்டினாரா என்று கேட்டுள்ளார். பிறகு தா.பாண்டியன் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார்.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் இந்தத் திட்டம் நிச்சயம் வரும். அது உறுதி, யாராலும் அதை தடுக்க முடியாது.
சென்னை நகரில் ஒரு கிரவுண்டு நிலம் 1 கோடி ரூபாய்க்கு விற்க முடியாது. சாதாரண மக்களால் அதை வாங்க முடியுமா. அதனால்தான் துணை நகரம் திட்டத்தை அறிவித்தார் முதல்வர். ஆனால் அதற்கும் எதிர்ப்பு.
இப்படி ஒவ்வொரு திட்டத்துக்கும் தோழமைக் கட்சிகளே தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி பல நல்ல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இனி வரும் தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடட்டும். 150 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் போன்ற நல்ல கட்சி நமக்குத் துணையாக இருக்கிறது. சோனியா காந்தி, முதல்வரை தனது தந்தை நிலையில் வைத்திருக்கிறார். அவர் இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி நம்முடன்தான் இருக்கும்.
நம்மை அலட்சியப்படுத்துகிற, இடையூறு செய்கிற கட்சிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நமக்குத் தேவையில்லை. தேர்தலை சந்திப்போம். தனித்து நின்று தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய தகுதியும், திறமையும் நமக்கு உள்ளது. சொந்தக் காலில் நிற்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.
தொல்லை தருகிற தோழமைக் கட்சிகள் நமக்குத் தேவையில்லை, காங்கிரஸ் மட்டும் போதும், தேர்தலை சந்திப்போம், தனித்து நிற்போம் என்ற ரீதியில், ஆற்காடு வீராசாமி பேசியிருப்பதும், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளை தேவையில்லை என்ற ரீதியில் அவர் பேசியிருப்பதும் திமுக கூட்டணியில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications