சல்மான் ஜாமீன் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு!
ஜோத்பூர்:நடிகர் சல்மான் கான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரிக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி வியாஸ் மறுத்து விட்டார். இதையடுத்து இதன் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்காரா என்ற அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடிக் கொன்ற வழக்கில், சல்மான் கானுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சமீபத்தில் ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சல்மான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பில் ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வியாஸ், இந்த மனுவை நான் விசாரிக்க மாட்டேன் என்று கூறி சென்று விட்டார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இந் நிலையில், சல்மான் கான் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது மனு நாளை எப்போது விசாரணைக்கு வரும் என்பதை நீதிமன்றப் பதிவாளர் முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தாலும் கூட உடனடியாக அவரால் விடுதலையாகி வெளியே வர முடியாது என்றே தெரிகிறது. நீதிமன்ற உத்தரவின் நகல் ஜோத்பூர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். நாளைக்குள் இது நடந்தாக வேண்டும்.
காரணம், வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் வக்கீல்கள் ஸ்டிரைக் நடக்கிறது. இதனால் நீதிமன்றங்கள் செயல்படாது என்று தெரிகிறது. மேலும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் நீதிமன்றம் விடுமுறையாகும்.
எனவே இப்போதைக்கு சல்மான் விடுதலையாகி வெளியே வருவது இயலாது என்று கூறப்படுகிறது.