தூத்துக்குடி, கோவில்பட்டி விபத்துகளில் 7 பேர் பலி
கோவில்பட்டி:தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே நடந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 பேர் பலியாகினர்.
கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவலைச் சேர்ந்த சங்கரப்பன் மகள் கோகிலா. இவரது கணவர் நாராயண பிரகாஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி கோகிலா எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றிரவு கோகிலா இடைச்செவலுக்கு வந்தார். இரவு தங்கிவிட்டு காலை 4.30 மணிக்கு கல்லூரிக்கு கிளம்பினார். கோகிலா வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜா தேவர் என்பவரது மகன் சண்முகசாமியிடம் கோகிலாவை இடைசெவல் விலக்கு பஸ் நிறுத்தத்தால் விட்டு வருமாறு அவர் தாயார் கூறினார்.
இதையடுத்து சண்முகசாமி தன்னுடைய மொபட்டில் கோகிலாவை அழைத்துக் கொண்டு இடைசெவல் விலக்கு அருகே சென்றபோது மொபாட் திடீரென பழுதாகி விட்டது.
அப்போது கோவில் பிச்சை என்பவர் பைக்கில் அங்கு வந்தார். அவரது பைக்கில் கோகிலாவும் சண்முகசாமியும் லிப்ட் கேட்டனர்.
கோவில் பிச்சை பைக்கை ஓட்ட பின் சீட்டில் சண்முகசாமியும், கோகிலாவும் அமர்ந்தனர். பைக் நாலாட்டின் புத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ரோட்டின் ஓரமாக பைக்கை திருப்பியபோது அங்கு நின்றிருந்த வேன் மீது பைக் பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா, சண்முகசாமி, கோயில்பிச்சை ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் விபத்து: 3 பேர் பலி
இதேபோன்று தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி, நடுகூட்டுடங்காட்டைச் சேர்ந்தவர் பங்காத்துரை. பள்ளி ஆசிரியரான இவர் தன் மனைவி லட்சுமியுடன் தங்கள் காரில் புதுக்கோட்டைக்கு சென்று தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
துறைமுக ரோட்டில் வந்தபோது எதிரே வந்த லாரியின் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பங்காத்துரை, லட்சுமி மற்றும் கார் டிரைவர் டேனியல் ஆகியோர் பலியாகினர்.
லாரி மீது லாரி மோதி கிளீனர் சாவு
துவரங்குறிச்சியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு நேற்றிரவு மினி லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கயத்தாரை சேர்நத டிரைவர் துரை என்பவர் வண்டியை ஓட்டி வந்தார்.
அதிகாலை 3 மணியளவில் மதுரை-கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் அனுமான் நகர் அருகே வரும்போது திடீரென லாரியில் ஏதோ சத்தம் கேட்கவே சாலையோரம் மினி லாரியை துரை நிறுத்தினர்.
கிளீனர் சின்னத்துரை இறங்கி பின்னால் சென்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பணகுடி நோக்கி சென்ற டிரைலர் லாரி, மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சின்னத்துரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாமாக இறந்தார்.
டிரைலர் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணன், கிளீனர் பாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர்.