அதிமுக தொண்டர்கள் வீர சிங்கங்கள்- ஜெயலலிதா
சென்னை:அதிமுக தொண்டர்கள் புடம் போட்ட தங்கங்கள், வீர சிங்கங்கள். யாருக்கும் எப்போதும் அஞ்ச மாட்டார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் 2 அதிமுக பிரமுகர்களின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்,
இன்றைய தினம் மணநாளில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் வாழ்க்கையில் எது வந்தாலும் சந்திக்கவும், சமாளிக்கவும், வெல்லவும் தயாராக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இரு நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் வளர்மதி வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால், என்ன கிடைத்தது எதையாவது கைப்பற்றினார்களா. ஒன்றும் இல்லை.
அச்சுறுத்தல், மிரட்டல், சோதனை மேல் சோதனைகள் போட்டு என்னை அசைக்க முயன்றார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் இப்போது கழகத்தை அசைத்து பார்க்கிறார்கள்.
வளர்மதி மிக துணிச்சலான பேச்சாளர். கருணாநிதியை பற்றி எங்காவது பேசியிருப்பார். அதனால் தான் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி இருக்கிறார்கள். கருணாநிதியின் உத்தரவின் பேரில் சோதனை நடந்துள்ளது.
அதிமுக சார்பில் மக்கள் பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறோம்.
இரு தினங்களுக்கு முன் காவல்துறை அனுமதியுடன் திருத்தணியில் மணல் கொள்ளை நடப்பதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அது அமைதியாக போராட்டம்.
போராட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து செல்ல நினைக்கும் போது செம்மலை உள்ளிட்ட 82 அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளியே வராதபடி வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளி இருக்கிறார்கள்.
எதற்காக இந்தக் கொடுமைகள், அடக்கு முறைகள்? எதற்காக இந்த ஹிட்லரிசம், பாசிசம்? இப்படி அடக்குமுறை செய்தால் அஞ்சுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அதிமுக தொண்டர்கள் புடம் போட்ட தங்கங்கள், வீர சிங்கங்கள். யாருக்கும் எப்போதும் அஞ்ச மாட்டார்கள்.
கொடுமைகளை, அடக்கு முறைகளை ஏவி விட்டு கழகத்தை ஒடுக்கி விட யார் நினைத்தாலும் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. எந்த கொடுமை வந்தாலும் அதை சந்திக்க நானும் கழகமும் தயார்.
இந்த அரசை மிக விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். கழகத் தொண்டர்களுக்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆகவே துணிவோடு மக்கள் பணியாற்றுங்கள். வெகு விரைவில் நம் வெற்றிப் பாதகை கோட்டையில் பறக்க இருக்கிறது.
அந்த நாளை மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றார் ஜெயலலிதா.
விசாலாட்சியிடம் ஜெ நலம் விசாரிப்பு:
மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விசாலாட்சி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ஜெயலலிதா இன்று காலை வீட்டில் போய் சந்தித்து நலம் விசாரித்தார்.