போலி முத்திரை தாள் வழக்கு-முகம்மது அலி உட்பட 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை:போலி முத்திரைதாள் மோசடி வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஐஜி முகமது அலி உள்பட 11 பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
![]() |
போலி முத்திரைதாள் மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளி அப்துல்கரீம் தெல்கி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் டிஐஜி முகமது அலி, டிஎஸ்பி சங்கர், எல்.ஐ.சி. ஏஜெண்டு ராமசாமி சாது, அலிக்கும் தெல்கிக்கும் இடையே பாலமாக செயல்பட்ட நிஜாமுதீன், நிஜாமுதீன் மனைவி நஷ்ரீன் உள்பட 11 பேரை சிபிஐ கைது செய்தது.
அவர்கள் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தெல்கி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புனே சிறையில் உள்ள என்னிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடைபெற்று வருவதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே அந்த வழக்கு விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிற்பகலில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்ப்ராஸ் நவாஸ், பாலாஜி ஆகியோரை பெங்களூர் போலீசாரும், பீட்டர் கென்னடி என்பவரை சென்னை போலீசாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பிற்பகலில் ஆஜர்படுத்தினர்.
புனே சிறையில் இருக்கும் தெல்கி உட்பட 3 பேர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராயினர். நீதிபதி வேலு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை படித்த பின்பு, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
தெல்கி தரப்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ்.எஸ்.பிள்ளை தமிழநாட்டில் தொடரப்பட்ட வழக்கில் தெல்கியையும், சர்ப்ராஸ் நவாஸையும் கைது செய்த தேதியினை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை. அதனால் அந்த விவரங்களை சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வேலு, சர்ப்ராஸ் நவாஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் வரும் செப்டம்பர் 12ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். இந்த வழக்கில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்ட நாள், முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தொடர்பான அனைத்து விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேலு உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications