சென்னையில் பலத்த மழை: தமிழகமெங்கும் மழை நீடிக்கும்
சென்னை:சென்னை மற்றும் தமிழகமெங்கும் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான அளவு மழை பெய்துள்ளது. கடந்த வாரம் மதுரை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக சென்னை நகரில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்ட சென்னை நகர மக்களுக்கு வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.
விட்டு விட்டு பெய்த மழை, சென்னை நகரில் நேற்று இரவு அடை மழையாக விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும். சென்னையில் உட்பட தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.