சென்னையில் பரவும் லெப்டோ ஸ்பைரோசிஸ்!
சென்னை: சென்னை மாநகரில் எலிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர்.
லெப்டோ ஸ்பைரோசிஸ் என்று சொல்லக் கூடிய இந்த காய்ச்சல், நாய், பூனை, எலி, மாடு, ஆடு போன்றவற்றின் மலம், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நோய் கிருமியால் வருகிறது.
தங்கள் உடம்பில் இருக்கும் காயங்கள், சிறு கீறல்கள் வழியாகவும் இந்த கிருமி உடலுக்குள் நுழைந்து விடும்.
உடம்பில் சிறு காயமோ, சிரங்கோ இருந்தால் அதனை சுத்தம் செய்து பாதுகாப்போடு இருக்க வேண்டும். இந்த நோய் வந்தவர்களுக்கு கடுமையான காய்ச்சலுடன் தலைவலி, உடம்பு வலியுடன் வாந்தியும் ஏற்படும். சிலருக்கு தோலில் தழும்பு கூட ஏற்படும்.
எலி காய்ச்சல் தொற்று நோய் கிடையாது. ஆனால் நாம் சுற்றுப்புறத்தை பாதுகாப்போடு வைத்து கொள்வதுடன், நாமும் சுத்தமாக இருந்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை அரசு மருத்துவமனைகளில் எவரும் அனுமதிக்கப்படவில்லையாம். ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக தண்டையார்பேட்டை, பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் இந்நோய் அதிகம் பேரை பாதித்துள்ளது.