கப்பலில் கடத்தப்படவிருந்த 2,000 மூட்டை ரேசன் அரிசி!
தூத்துக்குடி:வெளி மாநிலங்களுக்கு மட்டுமே கடத்தப்பட்டு வந்த தமிழக ரேஷன் அரிசியை முதன் முதலாக வெளிநாட்டுக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2000 மூட்டை ரேஷன் அரிசி பறிமூதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கரடிக் கத்து கத்தியும் கூட இதுவரை அரிசிக் கடத்தலை முழுமையாக தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை.
இடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரிசிக் கடத்தல் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சில நாட்கள் அரிசிக் கடத்தல்காரர்களைப் பிடிக்க வேட்டை நடந்தது. ஆனால் லாரிகளையும், அரிசி மூட்டைகளையும்தான் அதிகம் பிடித்தனர். பிடிபட்ட ஆட்களின் எண்ணிக்கை அந்த அரிசி மூட்டைகளை விட வெகு குறைவுதான்.
இந்த நிலையில், தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்குக் கடத்துவதற்கான முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்னர்.
தூத்துக்குடி அருகே உள்ள மீன் வளக்கல்லூரிக்கு எதிரில் கிட்டங்கி ஒன்று உள்ளது. இந்த கிட்டங்கியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் தலைமையில் உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2,000 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.35 லட்சமாகும்.
இது தொடர்பாக அந்த கிட்டங்கியில் இருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் மணி, கிளீனர் காசி, குடோன் வாட்ச்மேன் கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குடோன் உரிமையாளர் உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட அரிசி மூடைகள் அனைத்தும் கப்பலில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இதுநாள் வரை அண்டை மாநிலங்களுக்கு மட்டும் கடத்தி வந்த ரேசன் அரிசி, இந்த சோதனை மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications