இந்து அமைப்பின் போராட்டத்தை படம் பிடித்ததமுமுக நிர்வாகி கைது: சதி திட்டமா?
பாளையங்கோட்டை:பாளையங்கோட்டையில் நடந்த இந்து மகா சபையினரின் ஆர்ப்பாட்டத்தை செல்போனில் ரகசியமாக படம் எடுத்த தமுமுக நிர்வாகி போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசியில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மோதலில் இரு சமூகங்களைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தென்காசி நகர இந்து முண்ணனி தலைவர் சக்தி பாண்டியனும் ஒருவர்.
14ம் தேதி மோதலில் தனது சகோதரர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகார் கொடுக்க சென்ற தன்னை போலீசார் கைது செய்துவிட்டதாக கூறி சக்தி பாண்டியன் உண்ணாவிரதம் இருந்தார்.
இந் நிலையில் சக்தி பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும், சேலம் மாவட்டம் ஓமலூர் பள்ளி மாணவி சுகன்யாவை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் இந்து மகா சபையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். முத்தப்பா தலைமை வகித்தார். பொது செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் மதுசூதனப் பெருமாள் மாவட்ட நிர்வாகிகள் வீரை முத்துபாண்டியன் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் தச்சை மண்டல தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுபபி கொண்டிருந்தனர்.அப்போது பின்புறமாக மறைந்து நின்ற தமுமுக பாளை நகர துணைத் தலைவர் பக்கீர் மைதீன் இந்த ஆர்ப்பாட்டத்தையும் அதில் பங்கேற்றவர்களையும் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஒரு பத்திரிக்கைக்கு படம் அனுப்பவே ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்ததாக பக்கீர் மைதின் கூறினார்.
ஆனாலும், இதன் பின்னணியில் ஏதாவது சதி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பக்கீர் மைதீனை சிபிசிஐடி புனலாய்வு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.