தலைமறைவு வைகுண்டராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்!
திருநெல்வேலி:ஜெயா டிவியின் பங்குதாரரும் வி.வி.மினரல் நிறுவனத்தை நடத்தி வருபவருமான வைகுண்டராஜன் தாது கடத்தில் வழக்கில் இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அணுசக்தி தயாரிப்பில் முக்கிய கனிமமான தோரியம் உள்ளிட்ட தாதுப் பொருட்களை நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் அள்ளி கடத்தி வந்தவர் வைகுண்டம். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இவர் மீது கனிம வளத்துறை வழக்குத் தொடர்ந்தது.
மேலும் விவசாயி ஒருவரை மிரட்டியது தொடர்பாகவும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கூடங்குளம் அருகேயுள்ள இருக்கன்துறையைச் சேர்ந்த சுவாமிதாஸ் என்ற விவசாயிக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வைகுண்டராஜன் விலைக்கு தருமாறு கேட்கவே சுவாமிதாஸ் மறுத்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சுவாமிதாஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே காரில் வந்த வைகுண்டராஜன், மீண்டும் அவரிடம் நிலத்தை கொடுத்துவிடு, நான் அதிலிருந்து மணல் அள்ள திட்டமிட்டுள்ளேன் என்று மிரட்டியுள்ளார்.
மீண்டும் சுவாமிதாஸ் மறுக்கவே ஆத்திரமடைந்த வைகுண்டராஜன், உன்னை கார் ஏற்றி கொலை செய்து விட்டு நிலத்தை எடுத்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து சுவாமிதாஸ் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாகவும் நெல்லை மாவட்ட போலீசார் வைகுண்டராஜனைத் தேடி வந்தனர்.
இந் நிலையில் ஒரு மாதத்துக்கு முன் சுவாமிதாஸ் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நான் வைகுண்டராஜன் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், சுவாமிதாஸ் மிரட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் தான் தலைமறைவாகிவிட்டார் வைகுண்டம். அவருக்கு சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து இன்று நெல்லை மாவட்ட ஜூடியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் சரணடைந்தார். அவருக்கு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
தினமும் வள்ளியூர் நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.