பிச்சை எடுக்கும் நிலையில் மாடல் அழகி!
டெல்லி:
ஒரு காலத்தில் முன்னணி மாடல் அழகியாக கேட் வாக் செய்து கொண்டிருந்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையானதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு டெல்லி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
![]() | ![]() |
![]() | ![]() |
அந்த பரிதாபத்துக்குரிய அழகியின் பெயர் கீதாஞ்சலி நாக்பால். மாடல் அழகியான அவருக்கு தற்போது வயது 32. இப்போதைய அவரது நிலை மிகவும் அவலமானது.
ஆனால் முன்னொரு காலத்தில் அவர் டெல்லியின் முன்னணி மாடல்களில் ஒருவர். சுஷ்மிதா சென்னும், இவரும் சம காலத்தில் மாடலிங்குக்கு வந்தவர்கள். சுஷ்மிதா சென்னும், இவரும் சேர்ந்து பல மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கீதாஞ்சலியின் இன்றைய நிலை என்ன? தெற்கு டெல்லியின் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் கீதாஞ்சலி. பிச்சை எடுத்து கிடைப்பதை சாப்பிடுகிறார். தெருவோரக் கடைவாசல்களில் இரவு நேரங்களில் தூங்கி எழுகிறார்.
ஏன் இந்த அவலம்? மாடலிங்கில் கொடி கட்டிப் பறந்தபோது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானார் கீதாஞ்சலி. இதனால் தேவையில்லாத பல பழக்கங்கள் வந்து சேர்ந்தன. இதையடுத்து குடும்பத்தினர் கீதாஞ்சலியை புறக்கணித்து விட்டனர்.
குடும்பத்தார் கைவிட்டதாலும், மாடலிங் வாய்ப்புகள் அடியோடு நின்று போனதாலும், நண்பர்கள் யாரும் கை கொடுக்க முன்வராத காரணத்தாலும் அனாதையாக மாறினார் கீதாஞ்சலி.
இதனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அழுக்கு உடையுடன், சிக்குப் பிடித்த தலையுடன், அலங்கோலமான முகத்துடன் காணப்பட்ட கீதாஞ்சலியைப் பார்த்த ஒரு புகைப்பட செய்தியாளர், அவரது நிலையைக் கண்டு மனம் இரங்கி, டெல்லி மகளிர் ஆணையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த மகளிர் ஆணையத்தினர் கீதாஞ்சலியை மீட்டு விமான்ஸ் மன நல மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
அதற்கு முன்பாக கீதாஞ்சலியை ஹாஸ் காஸ் காவல் நிலையத்திற்கு மகளிர் ஆணையத்தினர் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது காரிலிருந்து இறங்க மறுத்தார் கீதாஞ்சலி. அவரை டாக்டர்கள் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர்.
கீதாஞ்சலிக்கு மனச் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சில காலம் சிகிச்சை அளித்தால் அவர் நலமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
கீதாஞ்சலியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்களது மகளைப் பார்க்க விருப்பவில்லை என்று கூறி விட்டார்களாம். போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டால்தான் அவளை நாங்கள் பார்ப்போம் என்று கூறி விட்டனராம்.
கீதாஞ்சலியின் இன்றைய நிலை நாடு முழுவதும் உள்ள மாடல் அழகிகள், பேஷன் டிசைனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
















Click it and Unblock the Notifications