வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்:br/சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து கடத்தப்பட்டு வெளிநாடுளுக்கு 22 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சாலியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் எனது குழந்தையை சேர்த்திருந்தேன். பின்னர் நான் எனது குழந்தையை பார்க்க சென்றபோது அங்கிருந்த எனது குழந்தை உட்பட 3 குழந்தைகளை தனியார் நிறுவனம் ஒன்று கடத்தி சென்றது தெரிய வந்தது.
போலியான சான்றிதழ் தயாரித்து 3 குழந்தைளையும் அந்த நிறுவனம் வெளிநாட்டினருக்கு விற்று விட்டது. கடத்திச் சென்ற தனியார் நிறுவனத்திடம் குழந்தையை தத்து கொடுத்தது போல போலியான ஆவணம் தயாரித்து, பின்பு அந்த போலி ஆவணத்தை மத்திய அரசிடம் காட்டி தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
பின்னர் தொண்டு நிறுவனம், அந்த 3 குழந்தைகளையும் வெளிநாட்டினருக்கு தத்து கொடுப்பது போல ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு கடத்தி செல்லப்பட்ட 3 குழந்தைகளையும் மீட்டு, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடவேண்டும் என்று சாலியா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில், 3 குழந்தைகள் மட்டும் கடத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் இதுவரை 22 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் வெளிநாட்டில் விற்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மட்டும் இதில் நடவடிக்கை எடுக்க இயலாது. மத்திய அரசு மற்றும் சிபிஐ ஒன்று சேர்ந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் வாதிடுகையில், சிபிஐ விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது. தென் மண்டல சிபிஐ இணை இயக்குனர் அசோக்குமார் தலைமையில் விசாரணை நடத்தலாம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிபிஐ, தனி அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில் ஆரம்பகட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications