பண இரட்டிப்பு மோசடி: 12 பேர் கைது
ஈரோடு:
நள்ளிரவு பூஜை நடத்தி பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 15 ஆயிரம் பணத்தை மோசடி செய்த 12 பேரைக் கொண்ட மதுரை கும்பலை ஈரோடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பிரேமா. இவருக்கும் காங்கேயத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் வியாபார ரீதியாக வெகுநாட்களாக தொடர்பு இருந்துள்ளது.
பால்ராஜ், பிரேமாவிடம் தனது வீட்டில் சில சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவாக கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பிரேமா, காங்கேயம் வந்து சாமியார்களை சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார்.
அவர்களும், இதெல்லாம் கடவுளின் சித்து விளையாட்டு, நீ சனிக்கிழமை நள்ளிரவு பணத்தோடு வா. இரண்டு மடங்காக பணத்தை கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
இதையடுத்து சாம்பிளுக்கு கடந்த சனிக்கிழமை இரவு ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு பால்ராஜின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு சாமியார்களை பார்த்துள்ளார் பிரேமா. சாமியார்கள் பிரேமாவிடம் பணத்தை வாங்கி ஒரு குடத்தில் போட்டு சில மந்திரங்களை சொல்லியுள்ளனர். சில நிமிடங்களிலேயே குடத்திலிருந்து ரூ.4 ஆயிரத்தை எடுத்து பிரேமாவிடம் கொடுத்தனர்.
அது மட்டுமில்லாமல், நீங்கள் எந்தளவிற்கு பணம் அதிகமாக கொடுக்கிறீர்களோ அப்போது தான் பணம் இன்னமும் அதிகமாக கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
அடுத்த நாளே வருவதாக கூறிச் ெசன்ற பிரேமா ரூ. 15 ஆயிரம் பணத்துடன் அடுத்த நாள் வந்து சாமியார்களை சந்தித்தார். அவர்களும் பணத்தை வாங்கி குடத்துக்குள் போட்டு பூஜை செய்துள்ளனர். பூஜை முடிந்த பின்பு குடத்துக்குள் கையை விட்டுள்ளனர். ஆனால் பணமும் இரட்டிப்பாகவில்லை. கொடுத்த பணமும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமா என்ன ஆச்சு என்று கேட்டபோது, தெய்வ குற்றம் ஆகிவிட்டது. அதனால் நீ இன்று போய் நாளை வா என்று சொல்லியுள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரேமா, எனக்கு இரட்டிப்பாக்கி தர வேண்டாம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த அவர்கள், போகாவிட்டால் ரத்தம் கக்கி இறக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளனர்.
பணத்தை இழந்த பிரேமா நேராக காங்கேயம் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பால்ராஜின் வீட்டில் குடியிருந்த சாமியார்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவர்கள் பல்வேறு பகுதிகளில் இதுேபால பரவிச் சென்று மோசடி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 12 பேரைப் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாம்.
இவர்களின் தலைவராக செயல்பட்டு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மணியை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications