திமுக - தேமுதிக பயங்கர மோதல்br/நடு ரோட்டில் அடிதடி - 12 பேர் காயம்
சேலம்:
சேலத்தில் விளம்பரப் பலகை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் திமுகவினரும், தேமுதிகவினரும் உருட்டுக் கட்டைகளுடன் நகரின் முக்கியப் பகுதியான ஐந்து ரோடு சாலையில் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழாவுக்காக வருகிற 13ம் தேதி முதல்வர் கருணாநிதி சேலம் வரவுள்ளார். இதற்காக சேலம் நகர் முழுவதும் திமுகவினர் கட் அவுட்டுகள், வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைப்பதில் படு பிசியாக உள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து ரோடு சாலையில், விளம்பர பலகை வைப்பது தொடர்பாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகளுடன் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது.
தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் போலீஸ் படையுடன் விரைந்து வந்தார். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த போலீஸார் முயன்றனர்.
ஆனால், போலீஸ் முன்பாகவே இரு கட்சியினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். போலீஸாரைத் தள்ளி விட்டு விட்டு கட்டைகளுடன் அடிக்கப் பாய்ந்தனர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி இரு கட்சியினரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க அரசு மருத்துவமனையைச் சுற்றிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications