கைதியை தப்பவிட்ட 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
கோவில்பட்டி:
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கைதியை தப்ப விட்டதற்காக அவருக்குக் காவலாக சென்ற 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விளாத்திக்குளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ஈஸ்வரன். பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஈஸ்வரன் கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதியன்று வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி ஏட்டுகள் சக்கையா, வேலுச்சாமி ஆகியோர் ஈஸ்வரனை விளாத்திக்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மாலையில் அவரை சப்-ஜெயிலில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.
கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே பஸ்ஸில் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைதி ஈஸ்வரன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரனை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் தேடினர். மறுநாள் மாலை புதூரில் பதுங்கியிருந்த ஈஸ்வரனை கைது செய்தனர்.
இதையடுத்து பணியின் போது அலட்சியமாக இருந்து கைதியை தப்பவிட்ட சம்பவத்திற்காக ஏட்டுகள் சக்கையா, வேலுச்சாமி இருவரையும் மாவட்ட எஸ்.பி தீபக் டாமோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications