வங்கதேச மாணவிக்கு குண்டுவெடிப்பில்br/தொடர்பில்லை - ஹைதராபாத் போலீஸ்
வேலூர்:
வேலூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் வங்கதேச மாணவி ஷாஹி ரப்சஞ்சானிக்கு ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக ஹைதராபாத் காவல்துறை உதவி ஆணையர் ரெட்டியண்ணா கூறியுள்ளார்.
ஹைதராபாத் வெடிண்டுச் சம்பவம் தொடர்பாக வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை ஹைதராபாத் சிறப்புப் புலனாய்வுப் படையினர் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்த ஹைதராபாத் போலீஸார் நேற்று வேலூருக்கு அழைத்து வந்தனர்.
மாணவி படித்து வந்த கல்லூரி, அவர் தங்கியிருந்த வீடு ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்று வந்துள்ள ஹைதராபாத், சார்மினார் உதவி ஆணையர் ரெட்டியண்ணா கூறுகையில், ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்த மாணவிக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
அவர் அப்பாவி. 2008ம் ஆண்டு ஜூன் மாதம் வரை செல்லக்கூடிய விசாவை அவர் வைத்துள்ளார். முறையான ஆவணங்களுடன்தான் அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இவரது தந்தை ஜெய்னுலாப்தீனும், சகோதரர் காஜியும், போலியான ஆவணங்களைக் காட்டி ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் கூட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு குற்றவாளிக்கு இவர்கள் புகலிடம் அளித்துள்ளனர். மாணவி ரப்சஞ்சானி மட்டுமே முறைப்படி இந்தியாவுக்கு வந்துள்ளார். மற்ற அனைவருமே சட்டவிரோதமாகத்தான் இங்கு வந்துள்ளனர்.
ரப்சஞ்சானியின் சகோதரர்கள் இர்பான், ஹூசைன் ஆகியோர் ஹைதராபாத் மதரஸாவில் பயின்று வருகின்றனர்.
ஹைதராபாத் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்து வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்றார் ரெட்டியண்ணா.
ரப்சஞ்சானி அப்பாவி என்று ஹைதராபாத் போலீஸாரே தெரிவித்திருப்பதால் அவரை விடுவிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications