அடுத்த மாதம் வருகிறார் பெனாசிர்
லண்டன்:
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று பாகிஸ்தான் திரும்பிய சில மணி நேரங்களில் மீண்டும் சவூதிக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்னொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார்.
முஷாரப்பால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸ் ஷெரீப் பின்னர் சவூதிக்கு நாடு கடத்தப்பட்டார். 7 ஆண்டுகள் கழித்து நேற்று அவர் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால் அவரைக் கைது செய்த பாகிஸ்தான் அரசு கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு அவரை மீண்டும் சவூதிக்கே நாடு கடத்தி விட்டது.
முதலில் தன்னைக் கைது செய்யுமாறு கூறிய ஷெரீப் பின்னர் சிறையில் அடைத்து விசாரணை என்ற பெயரில் தன்னை பழிவாங்குவதை விட தான் மீண்டும் சவூதிக்கே திரும்ப விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்தே அவர் ஜெட்டாவுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக பாகஸ்தான் அரசு கூறியுள்ளது.
நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஷெரீப் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து இன்று பல்வேறு கட்சிகள் பாகிஸ்தானில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் தானாகவே நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குப் போய் விட்ட பெனாசிர் பூட்டோ அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
தான் திரும்பும் தேதியை வருகிற 14ம் தேதி அறிவிக்கவுள்ளதாக பெனாசிர் பூட்டோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பெனாசிர் கட்சியுடன் கூட்டணி அமைக்க முஷாரப் முடிவு செய்தார். இதற்காக பெனாசிருடன் அவர் நேரிலும் பேச்சு நடத்தினார். இதன் அடிப்படையில் அவர்களுக்குள் ஒப்பந்தமும் ஏற்பட்டது.
ஆனால் பெனாசிர் விதித்த சில நிபந்தனைகளை முஷாரப் ஏற்க மறுத்ததால் அந்த ஒப்பந்தம் முடிந்து போய் விட்டதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.
இந்த நிலையில் பெனாசிர் நாடு திரும்புகிறார். அவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவாரா அல்லது பாகிஸ்தானிலேயே தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications