விஜயகாந்த் கல்லூரியில் புகுந்துbr/மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் உள்ள தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு சொந்தமானஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் இன்று ரவுடிக் கும்பல் புகுந்து மாணவர்களை சரமாரியாக தாக்கியது.
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் நடிகர் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கிடையே வாலிபால் போட்டி நடைபெற்றது.
அப்போது சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. சீனியர் மாணவர்களை முதலாம் ஆண்டு படிக்கும் பிரதீப் என்ற மாணவன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் பிரதீப்பை கண்டித்துள்ளனர். ஆனால் பிரதீப் அதைக் காதில் வாங்காமால் தொடர்ந்து திட்டவே சீனியர் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பிரதீப்பை அடித்துள்ளனர்.
பிரதீப்பின் தந்தை லோக்கல் அரசியல்வாதியாம். இதையடுத்து ரவுடிக் கும்பலுடன் பிரதீப் இன்று கல்லூரிக்கு வந்தார். தன்னைத் தாக்கிய சீனியர் மாணவர்களை அடிக்கத் தேடினார். ஆனால் அவர்கள் இல்லாததால் ஆத்திரத்தில் கல்லூரிக்குள் புகுந்து கண்ணில் அகப்பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளார்.
இந்த தகவல் சீனியர் மாணவர்களுக்கு தெரியவர உடனே அவர்கள் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர். அரசியல்வாதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் மாணவர்களின் புகாரை வாங்க மறுத்த போலீஸார், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
இதையடுத்து பயந்து போன சீனியர் மாணவர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தாம்பரம் போலீஸார், மாணவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தகவல் தெரிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் அனகை முருகேசன் விரைந்து வந்து மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதுகாப்புடன் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications