தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்br/சில தலைகள் உருளும்
சென்னை:
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரவுள்ளது. 3 முக்கிய அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும் என பேச்சு நிலவுகிறது. திமுக முப்பெரும் விழா முடிந்த பின்னர் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த அமைச்சர்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன் முதல்வர் கருணாநிதி நேற்று திடீரென முக்கிய ஆலோசனை நடத்தினார். மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இந்த ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
இந்த ஆலோசனையின்போது, அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன்படி மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்துள்ள 3 முக்கிய அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்க முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளாராம். பதவி பறிக்கப்படுவோர் பட்டியலில் முதலில் உள்ளவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன். இவர் முதல்வரின் முழு அவ நம்பிக்கையையும் சம்பாதித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கொள்ளை கொள்ளையாய் நடந்து கொண்டிருக்கும் மணல் திருட்டுக்கு தா.மோ.தான் காரணம் என முதல்வருக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாம். இதையடுத்து அவரை திமுக தலைமை சமீபகாலமாக ஒதுக்கியே வைத்துள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தபோதிலும் கூட அதையும் மீறி முதல்வரின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுள்ளார் தா.மோ.அன்பரசன். அது மட்டுமல்லாது இவரது தொகுதியிலும் கூட (ஆலந்தூர்) அன்பரசன் மீது பெரும் அதிருப்தி நிலவுகிறது.
இப்படி பல மைனஸ் பாயிண்டுகளை சம்பாதித்துள்ள அன்பரசனின் பதவி பறிக்கப்படுவது நிச்சயம் என திமுக வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.
இதேபோல, அடிக்கடி அடிதடி, மிரட்டல், என பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கி வருபவரான மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.பி.ராஜா ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
சாமியின் குடும்பத்தினர் அடிக்கடி மீனவர்களுடன் மோதுவதும், அவர்களை மிரட்டுவதும், அடிதடியில் ஈடுபடுவதாக இருப்பதால் சாமிக்குப் பதவி பறிபோவது நிச்சயம் என்கிறார்கள்.
பதவி பறிப்பு தவிர சிலரின் இலாகாக்கள் மாற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. பரிதி இளம்வழுதியிடம் தற்போது கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுத் தலைவர் பதவி உள்ளது. எனவே அவரது இலாகாவில் மாற்றம் இருக்கலாம். இதுதவிர மேலும் ஓரிருவரின் இலாகாக்களில் மாற்றம் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
திமுகவின் முப்பெரும் விழா வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முடித்த பின்னர் அமைச்சரவை மாற்றத்தை முதல்வர் கருணாநிதி மேற்கொள்வார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications