கருணாநிதி கோரிக்கையை நிராகரித்தார்br/நெடுமாறன்: 4வது நாளாக உண்ணாவிரதம்!
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கைகைய நிராகரித்துள்ளார்.
4வது நாளாக அவரது உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
யாழ்ப்பாணத்தில் பட்டினியால் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் சென்று திரட்டிய, ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குமாறு நெடுமாறன் கோரி வந்தார்.
ஆனால் மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொதிப்படைந்த நெடுமாறன், தானே அவற்றை படகுகள் மூலமாக இலங்கைக்குக் கொண்டு செல்லப் போவதாக அறிவித்தார்.
அதன்படி நாகை துறைமுகத்திற்கு நூற்றுக்கணக்கானோருடன் சென்றார் நெடுமாறன். ஆனால் அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதையடுத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் நெடுமாறன்.
பின்னர் சென்னை திரும்பிய நெடுமாறன், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.
முதலில் நெடுமாறன் உண்ணாவிரதத்தை போலீஸார் தடுத்துக் கைது செய்ய முயன்றனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களையும் அடித்துத் துரத்தினர். இவற்றையும் மீறி நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நெடுமாறன் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார் நெடுமாறன்.
நேற்று 3வது நாளாக அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவரை டாக்டர் கலாநிதி அவ்வப்போது பரிசோதித்து வருகிறார். அவ்வப்போது தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்கிறார் நெடுமாறன்.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை நெடுமாறன் நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நள்ளிரவு 12 மணியளவில் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அவருக்கு நாங்கள் எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது
என் உடல் நிலை, கோரிக்கை குறித்த அக்கறையுடனும், தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றி.
இலங்கை அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி, பட்டினியாலும், நோயிலும், அல்லல்படும் 5 லட்சம் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கிட தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திரட்டப்பட்ட சற்றே ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என் கோரிக்கைக்கு பதில் தராமல் மத்திய அரசு 7 மாதங்களாக இழுத்தடித்து வருவதை தங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
தாங்கள் சேலம் - ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இதுகுறித்து ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த அணுகுமுறை அடிப்படையில், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு உங்களை சந்தித்துப் பேச விருப்பமாக உள்ளது.
எனவே இந்த நிலையில் என் காலவரம்பற்ற பட்டினப் போராட்டத்தை தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பதில் கொடுத்திருக்கிறோம். முதல்வர் கருணாநிதி சென்னை வந்து எங்கள் அமைப்புடன் பேசி முடிவு ஏற்படும் வரையில் உண்ணாவிரதம் தொடரும்.
யாழ்ப்பாணத்தில் வாழும் 5 லட்சம் தமிழர்களுக்காக நாங்கள் சேகரித்த உண்வுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு அந்த சங்கம் சமமதம் தெரிவித்து பிப்ரவரி 9ம் தேதி அனுமதி கடிதத்தை மத்திய அரசிடம் கொடுத்தது.
ஆனால், அதற்கு இந்திய அரசு பதில் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இலங்கைக்கு உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதிக்கும் வரையில், போராட்டம் தொடரும்.
தமிழர் பிரச்சினைகளில் முதல்வர் கருணாநிதிக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. எனவே அவர் இந்த பிரச்சினை தொடர்பாக அவர் மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார் நெடுமாறன்.
கருணாநிதிக்கு சரத்குமார் கோரிக்கை:
பட்டினியால் வாடும் இலங்கைத் தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசுடன் தமிழக முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத இலங்கை தமிழர் பிரச்சனையில், பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்ப பழ.நெடுமாறன் முயற்சி செய்தார்.
ஆனால் அவரின் முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முட்டுக்கட்டை போட்டதுடன், அவர் இலங்கைக்குச் செல்லப் போவதாக அறிவித்தவுடனே மாநில அரசு தடுத்து கைது செய்தது.
இதனால் பழ.நெடுமாறன் அவர்கள் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மத்திய அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக தான் இங்கும் ஆட்சி செய்கிறது.
எனவே இந்த சூழலில் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் போய் சேர மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தி ஆவன செய்ய வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications