தமிழகத்துக்கு அநீதியை போக்கும் கட்சிக்குbr/மத்தியில் ஆதரவு தருவோம்- விஜய்காந்த்
புதுக்கோட்டை:
திரும்பத் திரும்ப திமுக, அதிமுகவுக்கே ஓட்டுப் போடாதீர்கள். மவுனப் புரட்சி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புதுக்கோட்டை தேமுதிக 3ம் ஆண்டு மாநாட்டில் விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.
தேமுதிகவின் 3ம் ஆண்டு விழா புதுக்கோட்டையில் நேற்று கோலாகலமாக நடந்தது. புதுக்கோட்டையே மிரளும் வகையில் திரண்டு வந்த தேமுதிக தொண்டர்களின் கூட்டத்தால் அந்த சிறு நகரம் திணறிப் போனது.
பாலன் நகரில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுத் திடலில் வெள்ளமென திரண்டிருந்த தொண்டர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குடை கூட பிடிக்காமல் மழையில் நனைந்தபடி தங்களது தலைவர் விஜயகாந்த்தின் பேச்சைக் கேட்டு குதூகலித்தனர்.
மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கியது. முதலில் விஜயகாந்த் படப் பாடல்கள் கலைஞர்கள் பாடினர். 5 மணி முதலே மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் மழையைப் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடியும், சிலர் உற்சாகத்தில் நனைந்தபடியும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
விஜயகாந்த் ஆறே முக்கால் மணியளவில் மேடைக்கு வந்தார். பின்னர் விஜயகாந்த் பேச ஆரம்பித்தார். அப்போது மைக் மக்கர் செய்யவே சிறிது நேரம் அமர்ந்தார் விஜயகாந்த். பின்னர் மைக் சரியானவுடன் பேசினார்.
மேடையில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
விஜயகாந்த் வழக்கம் போல இயல்பாக பேசினார். அவர் பேசுகையில், நாம் கட்சி ஆரம்பித்தபோது இது தமிழகத்தின் 71வது கட்சி என்றார்கள், கேலி பேசினார்கள். இன்று நாம் நம்பர் ஒன் கட்சியாக மாறியுள்ளோம்.
அதேபோல ரேஷன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்போம் என்று கூறினோம். அது எப்படி கொடுக்க முடியும் என்றார்கள். கலர் டிவி வீடு தேடி வரும்போது, ரேஷன் பொருட்களை கொண்டு வர முடியாதா?
எங்களது அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. தேமுதிக ஆட்சிக்கு வரும்போது ரேஷன் பொருட்களும் வீடு தேடி வரும்.
கேபிள் டிவி திட்டமே முழுக்க முழுக்க மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. கலைஞர் டிவிக்குக் கிடைக்கும் விளம்பர வருவாயில் இருந்து ஏன் இலவசமாக கேபிள் டிவி வழங்க முடியாது?
கேபிள் டிவிக்கு 50, 75 என கட்டணம் ஏன் நிர்ணயிக்கிறீர்கள். இப்படி நான் கேட்டால் சிறையில் போடுவார்கள். உங்களுக்காக சிறை செல்ல நான் தயார்.
நான் தனிமனிதனாக நின்று மக்களுக்காகப் போராடுகிறேன். அதற்காக என்னுடைய சொத்துக்கள் அழிந்தாலும் கவலை இல்லை.கட்சி ஆரம்பித்த பின்னர் ரூ. 100 கோடியை இழந்துள்ளேன். 70 கோடி ரூபாய் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். அற்காக 8 கோடி கொடுப்பதாக கூறினார்கள். கவலை இல்லை.
எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் பெரியது. நீங்கள் கொடுக்கும் டானிக்கை வைத்து இன்னும் கொஞ்சம் சண்டை போடுவேன்.
என்னை யாரும் பயமுறுத்த முடியாது. யாருக்கும் விஜயகாந்த் சளைத்தவன் இல்லை. எனது தைரியத்தை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது.
கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே நான் யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறினேன். ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி என்றேன். அதன்படியே தனித்தும் நின்றோம்.
இப்போது நாடாளுமன்றத்திற்குத் திடீர் தேர்தல் வந்தால் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்கிறார்கள். மாநாட்டின் தீர்மானத்தில் அதுகுறித்துக் கூறியிருக்கிறோம்.
திடீரென நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வந்தால், தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை அறவே அகற்றிடும் வல்லமையும், வாய்ப்பும் கொண்ட அரசியல் கட்சி ஆட்சி அமைப்பதையே தேமுதிக ஆதரிக்கும் என்று தீர்மானத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம். ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு, அவ்வளவுதான்.
தேமுதிக ஆதரவு மட்டுமே அளிக்கும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கம்யூனிஸ்டுகள் பிரச்சினை செய்து வருகின்றன. எனவே விரைவில் தேர்தல் வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கும் மேலாக, சேது சமுத்திரத் திட்டத்தை இந்து மக்களின் மனது பாதிக்காத வகையில் நிறைவேற்றுங்கள் என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விரைவில் தேர்தல் வருமோ என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தால் ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து மக்களின் ஓட்டுக்ளை அப்படியே வாங்கி ஆட்சிக்கு வந்து விடலாம் என நினைக்கிறார்கள். இதற்கு இளைஞர்கள் முட்டுக்கட்டை போட வேண்டும்.
நான் உங்களை நம்புகிறேன், நீங்கள் என்னை நம்புங்கள். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று தரும். எனக்கு தெய்வத்தின் ஆதரவு உண்டு. திரும்பத் திரும்ப அந்த இரண்டு கட்சிகளுக்கே ஓட்டுப் போடாதீர்கள். மக்கள் புரட்சி, மவுனப் புரட்சி வர வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. ஒன்று மட்டும் உறுதி, யாருக்கும் பயந்து நான் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார் விஜயகாந்த்.
பின்னர் பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:
- காவிரியில் வெள்ளம் வரும்போது வீணாக போய் கடலில் கலக்கும் நீரை புதுக்கோட்டைக்குத் திருப்பி வட வேண்டும்.
- புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- தமிழகத்தில் ஓடும் ஆறுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
- கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கைத் தமிழர்கள், மருந்து கிடைக்காமல், உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமிழர் பிரச்சிநையில் இந்திய அரசு மனிதாபிமான முறையில் தலையிட்டு இலங்கை அரசின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வினால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். புதிய வகை பேருந்துகளை அறிமுகப்படுத்தி மறைமுக கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. இதைக் கண்டிக்கிறோம்.
- 1974ம்ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்தத் தீவை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும். இதன் மூலம் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி நமது மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- முதல்வர் உள்பட யார் ஊழல் செய்தாலும் உடனடியாக தண்டிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். 1996ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதுதொடர்பாக லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சட்டத்தைக் கொண்டு வராததை கண்டிக்கிறோம்.
- தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை அறவே அகற்றிடும் வல்லமையும், வாய்ப்பும் கொண்டு அரசியல் கட்சி, மத்தியில் அரசு அமைக்க ஆதரிப்போம்.












Click it and Unblock the Notifications