சுனாமி பீதி விலகியது - மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மீனவர்களிடையே கடந்த 3 நாட்களாக நிலவி வந்த சுனாமி பீதி விலகியதைத் தொடர்ந்து அவர்கள் கடலில் மன் பிடிக்கச் சென்றனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தால் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி திரேஸ்புரம், இனிகோ நகர், தருவைகுளம், மீன்பிடித் துறைமுகம், புதிய துறைமுகம் கடற்கரை பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதன் பேரில் மாவட்டத்தை சேர்ந்த 2500 நாட்டுப்படகுகள், 300 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 25 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று நாட்டு படகு மீனவர்கள் சிலர் குறைந்த தூரத்திற்கு சென்று மீன் பிடித்து வந்தனர். நேற்று பகல் முழுவதும் வானம் மேக முட்டமாகவே காணப்பட்டது. இன்று நிலைமை சீரடைந்ததையொட்டி அனைத்து மீனவர்களும் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.