கெட்டுப் போன உப்புமா சாப்பிட்டbr/அதிமுகவினருக்கு வாந்தி, பேதி, மயக்கம்!
சேலம்:
அண்ணா பிறந்த நாளையொட்டி சேலத்தில் நடந்த விழாவில் பரிமாறப்பட்ட உப்புமாவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட அதிமுகவினருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் குரால்நத்தம் பஞ்சாயத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இரவில் அனைவருக்கும் உப்புமா பரிமாறப்பட்டது. இதை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம், சிலருக்கு பேதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அனைவரும் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அனைவரும் மாற்றப்பட்டனர்.
குரால்நத்தம் பஞ்சாயத்துத் தலைவர் ராமர் உள்ளிட்ட 10 பேர் அன்னதானப் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை செல்வகணபதி போய் பார்த்து நலம் விசாரித்தார். பரிமாறப்பட்ட உப்புமாவுக்குப் பயன்படுத்தப்பட்ட ரவை கெட்டுப் போனதாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications