தடைகளை கடந்து சேது திட்டம் நிறைவேற்றப்படும்- டி.ஆர்.பாலு உறுதி
சென்னை:
தடைகளைக் கடந்து சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் 140 ஆண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமாகும். முதல்வர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரது முன்னிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தற்போது இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 14 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஆதம் பாலம் பகுதியில் மட்டும் அகழ்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆதம் பாலம் பகுதியில் பணியை மேற்கொள்ள உரிய உத்தரவினைப் பெறும். திட்டம் திட்டமிட்டபடி விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும் என நம்புகிறேன்.
அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒரு முடிவை எடுத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றும்போது,
தனிப்பட்ட சிலர் பொது நல வழக்கைத் தொடர்ந்து அந்தத் திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பது தேச நலனுக்கு எதிரானது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் கடந்த 2000மாவது உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதை இப்போது குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.












Click it and Unblock the Notifications