51 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரூ. 20 கோடியில் சுரங்கப் பாதைகள்
மதுரை:
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 51 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரூ. 20 கோடி மதிப்பிட்டில் மக்கள் நடந்து செல்ல சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி முரளி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை தற்போது இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும். இந்தப் பாதை முழுவதும் மின்மயமாக்கப்படும் பாதையாக மாற்றப்படும்.
துறைமுகங்கள் உள்ள பகுதிகளில் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விபத்துக்களை குறைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை ரயில்வே கோட்டத்தில் 51 இடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. இவை அனைத்திலும் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 18 இடங்களில் சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பகுதிகளிலும் சுரங்கபாதை அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications