இலங்கைக்கு குழு அனுப்ப சரத் கோரிக்கை
சென்னை:
அணு சக்தி ஒப்பந்தம் சிறப்பான ஒன்று. அதனால் இந்தியாவுக்கு நல்லது நடக்கும் என்றே நினைக்கிறேன் என நடிகரும், அகில சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் சிறப்பானதாகவே தோன்றுகிறது. இதனால் நமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பல சாதகமான அம்சங்கள் கிடைக்கக் கூடும்.
அணு சக்தி விலை குறைவானதாக இருந்தால் அதற்காக நாம் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதன் சாதக அம்சங்களையே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
நிச்சயம் இந்த ஒப்பந்தத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு அலசி ஆராய்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைப் பார்த்தால், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரலாம் என்றுதான் தோன்றுகிறது.
லோக்சபாவுக்கு இடைத்தேர்தல் வரும் என்பதே எனது கணிப்பு. ஆனால் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதை தேர்தல் நேரத்தில்தான் கூற முடியும்.
இலங்கையில் தமிழர்கள் படும் அவஸ்தை குறித்து தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும், அக்கறை காட்ட வேண்டும். முதல்வர் கருணாநிதி, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்று கொண்டவர். உயர் மட்டக் குழுவை அவர் அமைத்து, இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர் தமிழர்கள் பிரச்சினை குறித்து விரிவாக அமர்ந்து பேசி ஆக்கப்பூர்வமான ஆலேசானை மேற்கொண்டு சுமூகத் தீர்வையும் அவர் பரிந்துரைக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு தரும் தமிழக அரசின் முடிவு வரவேற்புக்குரியது, இதை பாராட்டி வரவேற்கிறேன் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications