வடிவேலுவை தாக்கிய தேமுதிகவினருக்கு முன்ஜாமீன்
சென்னை:
நடிகர் வடிவேலுவை தாக்கிய வழக்கில் தேமுதிக தொண்டர்கள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
விஜயகாந்தின் தங்கை திருமலாவின் கணவர் கடந்த 12ம் தேதி இறந்து விட்டார். இது தொடர்பாக துக்கம் விசாரிக்க தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் சாலிகிராமத்தில் உள்ள அவரின் தங்கை வீட்டின் முன் குவிந்தனர்.
திருமலாவின் வீட்டிற்கு எதிராகத்தான் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது. அவர் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது வழியில் துக்கம் விசாரிக்க வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அவரால் காரை எடுக்க முடியவில்லை.
இதனால் வடிவேலு, வாகனங்களை ஓரமாக நிறுத்துமாறு சொல்லியுள்ளார். இதற்கு தேமுதிக தொண்டர்கள் வடிவேலுவை தாக்கிவிட்டனராம். நடிகர் வடிவேலு தன்னை தாக்கியவர்கள் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரை வைத்து போலீசார், நடிகர் விஜயகாந்தின் மேலாளர் சதீஷ் உட்பட 30 பேர் மீது வழக்கு தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகள் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசார் தங்களையும் கைது செய்துவிடக்கூடும் என்று எண்ணி தேமுதிகவினர் 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், மனுதாரர்கள் 5 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கியதுடன், தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கைதான 6 பேர் ஜாமீன் கேட்டு மனு:
இந்நிலையில் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்ட தேமுதிக நிர்வாகிகள் உட்பட 6 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வக்கீல்கள்,
இந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியுள்ளோம். எனவே கைது செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
இதற்கு அரசுத்தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே நீதிபதி குறுக்கிட்டு உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் தீர்ப்பு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். பிறகு இந்த ஜாமீன் மீதான தீர்ப்பை வழங்குகிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications