இன்னொரு ஈராக் ஆகிறது பாக்.: பெனாசிர் அச்சம்
துபாய்:
இன்னொரு ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானாக பாகிஸ்தான் மாறி வருகிறது. அதிலிருந்து பாகிஸ்தானைக் காக்கவே நான் பாகிஸ்தான் திரும்ப ஆர்வமாக உள்ளேன், தீவிரமாக உள்ளேன் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூறியுள்ளார்.
பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்தபோது, அவரது தம்பி மீர் முர்தசா பூட்டோ, கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் துபாயில் அனுசரிக்கப்பட்டது. இதில் பெனாசிர் பூட்டோ கலந்து கொண்டார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வரும் பெனாசிர், நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், பெனாசிர் பேசுகையில், அதிபர் முஷாரப்புடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கவும், ஆட்சி அதிகாரத்தில் சமநிலை ஏற்படவும், நிலையான அரசியல் முறையை கொண்டு வரவும் வேண்டி அந்தப் பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொண்டேன்.
ஆனால் ராணுவ தளபதி பதவியில் இருந்தபடி அதிபர் பதவியிலும் முஷாரப் தொடர்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை ஒருபோதும் ஏற்கவும் மாட்டேன். வரப் போகிற தேர்தல் சுதந்திரமான முறையில் நடக்காவிட்டால் அதை நான் ஏற்க மாட்டேன்.
பாகிஸ்தான் உள்நாட்டுப் போரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. தீவிரவாதிகள் கை ஓங்கி விட்டது. முன்பெல்லாம் அப்பாவி மக்களை கொன்று வந்த தீவிரவாதிகள் இப்போது நமது நாட்டு ராணுவ வீரர்களையும் கொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது. வெளிநாட்டு ஊடுறுவலுக்கான அபாயமும் அதிகரித்து வருகிறது.
இன்னொரு ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானாக பாகிஸ்தான் மாறுவதை நான் விரும்பவில்லை. இந்த அபாயத்திலிருந்து பாகிஸ்தானைக் காக்கவே நான் நாடு திரும்ப தீர்மானித்தேன், தீவிரமாக உள்ளேன்.
என்னிடம் துப்பாக்கி இல்லை. ஆனால் தீவிரவாதிளை நாட்டை விட்டு விரட்டும் திட்டங்கள் எனது பாகிஸ்தான் மக்கள் கட்சியிடம் உள்ளது.
நான் மீண்டும் நாடு திரும்பக் கூடாது என மிரட்டப்படுகிறேன். ஆனால் அதற்காக நான் பயப்படவில்லை. நான் திரும்பி வந்தால் உயிருக்கு ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று அவர்களிடம் சொல்லப் போகிறேன்.
எனது மக்களிடம் நான் திரும்பிச் செல்கிறேன். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள் என்றார் பெனாசிர்.
பெனாசிர் வருகையையொட்டி பெரும் திரளானோர் கூடி விட்டனர். ஒரு கட்டத்தில் பெனாசிரால் பேசவே முடியாத அளவுக்கு கூட்டம் அவரை நெருக்கியடித்தது.












Click it and Unblock the Notifications