முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் 100 பவுன் நகை திருடிய ஹெல்மட் திருடி பிடிபட்டார்
சென்னை:
ஹெல்மட் அணிந்து கொண்டு, முன்னாள் பாமக எம்.எல்.ஏ உலகரட்சகன் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியை அடித்து உதைத்து, மயக்கப்படுத்தி விட்டு 100 பவுன் நகைகளுடன் தப்பிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பாமக எம்.எல்.ஏ உலகரட்சகன் தனது மனைவி, மகனோடு கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்தார். அப்போது உலகரட்சகனின் மனைவி அம்பிகா மட்டுமே வீட்டில் இருந்தார்.
ஹெல்மட் அணிந்தபடி வந்த அந்தப் பெண் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர் கொடுத்த அம்பிகாவிடம், மீண்டும் தண்ணீர் கேட்டார். இதையடுத்து அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார் அம்பிகா.
அப்போது அம்பிகாவை சரமாரியாக அடித்த அந்தப் பெண், கழுத்தையும் நெரித்தார். இதில் அம்பிகா மயக்கமடைந்தார். பின்னர் அந்தப் பெண் வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினார்.
இந்தத் துணிரகத் திருட்டு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் துணை நடிகை காஞ்சனா என்பவரையும் விசாரித்தனர். இவர் உலகரட்சகன் மூலம் வீடு வாங்கியுள்ளார்.
ஆனால் அவரிடம் விசாரணை நடத்தியதில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மந்தைவெளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் போலீஸ் பிடியில் சிக்கினார். அவருடைய கணவர், உலகரட்சகனிடம் முன்பு டிரைவராக வேலை பார்த்தவர். தற்போது வேலையில் இல்லை.
கணவனும், மனைவியும்தான் அன்றைய தினம் உலகரட்சகன் வீட்டுக்கு வந்துள்ளனர். லட்சுமி மட்டும் ஹெல்மட் அணிந்தபின் வீட்டுக்குச் சென்று அம்பிகாவைத் தாக்கி நகை, பணத்துடன் வெளியே வந்துள்ளார். பின்னர் தனது கணவர் பைக்கில் ஏறிப் பறந்து விட்டார்.
லட்சுமி மற்றும் அவரது கணவரைக் கைது செய்த போலீஸார் கொள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்தி ஹெல்மட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் கமிஷ்னர் பாராட்டு:
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை உடனடியாக பிடித்த போலீசாரின் திறமையை சென்னை மாநகர கமிஷ்னர் நாஞ்சில் குமரன் பாராட்டியுள்ளார்.