திமுக மத்திய அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - பாஜக கோரிக்கை
போபால்:
ராமர் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி கூறிய கருத்துக்களுக்காக, மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து திமுக அமைச்சர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
போபாலில் நேற்று பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராமர் பால பிரச்சினை முக்கிய இடம் பிடித்துள்ளது. இதையடுத்து அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் முதல் நாள் கூட்டத்தில் முக்கியமாக விவாதம் நடைபெற்றது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பேசுகையில், ராமர் பாலம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கள், தொடர்ந்து கூறி வரும் கருத்துக்கள் இந்துக்களின் மனதை ஒட்டுமொத்தமாக புண்படுத்தியுள்ளது.
இதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து திமுக அமைச்சர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
ஓட்டு வங்கி அரசியலில் மிக மோசமான பாணியை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ராமரை இழிவுபடுத்தியதன் மூலம் ஒட்டு மொத்த இந்துக்களின் வெறுப்பையும் காங்கிரஸ் கட்சி சம்பாதித்துள்ளது. இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களின் நம்பிக்கையோடு விளையாடிய மன்னிக்க முடியாத குற்றத்திற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பது சிறுபான்மை அரசு. காரணம், கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுகவும் அரசுக்கு எதிராக பேசி வருகின்றன. எனவே இந்த அரசு ஆட்சியைக் கலைத்து விட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பாஜக முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராமர் பால விஷயத்தில் அதிமுகவும், தீவிரமாக இறங்கியுள்ளது. ஜெயலலிதா இதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.