சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள்- 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவுள்ளதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பாஜக, இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தனியாரும் சுமார் 1,000 சிலைகளை வைத்து விசேஷ பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. காலை மணிக்கு மின்ட் பகுதியில் சிவசேனா (ராஜேந்திரன் பிரிவு) சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ராயபுரம் பாலம், எஸ்.என்.செட்டிதெரு வழியாக விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
காசிமேடு துறைமுகம் பகுதியில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
இன்று மாலை சிவசேனா (குமாரராஜா பிரிவினர்) சார்பில் தென் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.
வேளச்சேரியிலிருந்து தொடங்கும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் தரமணி, கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீலாங்கரை கடற்கரையை சென்றடையும். அங்கு சிலைகள் கரைக்கப்படும்.
நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. நாளை மொத்தம் 8 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளன.
காலை சூளைமேடு வியாபாரிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெறும். வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து முத்துசாமி பாலம், போர் நினைவு சின்னம், சாந்தோம் நெடுஞ்சாலை, சீனிவாசபுரம் வழியாக சிலைகள் கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படும்.
மேலும் இந்து மக்கள் கட்சித்தலைவர் ஸ்ரீதரன் தலைமையிலும் ஊர்வலம் நடைபெற உள்ளது. கே.கே.நகரில் இருந்து பட்டினப்பாக்கம் வரை ஊர்வலம் நடக்கவுள்ளது.
நாளை பிற்பகலில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தலைமையில் ஊர்வலம் நடைபெற உள்ளது. பாரிமுனையிருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் வால் டாக்ஸ் சாலை, குப்புசாமி பாலம், காமராஜர் சாலை, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரையை சென்றடையும்.
மேலும் வள்ளுவர் கோட்டத்தில் இருந்தும், திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரன் கோவில் தெருவில் இருந்தும் ஊர்வலகங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த ஊர்வலங்களையொட்டி சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10,000 போலீசார் விநாயகர் சிலைகள் செல்லும் ஊர்வலப் பாதைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஊர்வலத்தின் போது சர்ச்சைக்குரிய கோஷங்கள் எதையும் எழுப்பக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் கமாண்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஊர்வலங்களையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் நேற்றிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர்கள் ரவி பாலசுப்பிரமணியம், துரைராஜ் மற்றும் போலீசார் விடிய விடிய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள அமைக்கப்பட்டு கடும் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கையாக 1,000 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 130 பேர் ரெளடிகள் ஆவர்.
கனடாவில் விநாயகர் சிலைக்கு அவமரியாதை:
இந் நிலையில் கனடாவில் எட்மாண்டன் நகரில் நடந்த ஒரு கண்காட்சியில் 4 விநாயகர் சிலைகள் நிர்வாணமாக இருப்பது போல வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவை உடனடியாக அகற்றப்பட்டன.