ஆர்ப்பாட்டம் மட்டும் போதும் - தொண்டர்களுக்கு திமுக உத்தரவு
சென்னை:
திமுக தொண்டர்கள் பாஜக, இந்து அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால் போதும். வேறு எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதாந்தியின் கொலை மிரட்டல் அறிக்கையால் கொந்தளித்த திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி. அலுவலங்களை தாக்கி சூறையாடினர். நூற்றுக்கணக்கான கொடிக் கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.
இதனால் தமிழகத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது. குறிப்பாக சென்னையில் பெரும் பதட்டம் நிலவியது. கேபிள் டிவி ஸ்டிரைக் வேறு நடந்ததால் என்ன நடக்கிறது என்றே மக்களுக்குத் தெரியவில்லை.
இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை மூலம் ஒரு அவரச வேண்டுகோளைப் பிறப்பித்தார். அதில், திமுகவினர் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால் போதும். சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையிலான எந்தப் போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி கோரியுள்ளதற்கு இணங்க வேறு விதமான போராட்டங்களில் திமுகவினர் யாரும் ஈடுபடக் கூடாது என்று அதில் அவர் கூறியுள்ளார்.