திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் பாஜக கோரிக்கை- ஜெவுக்கு நன்றி
சென்னை:
பாஜக அலுவலகங்கள் மீது திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டது, கொடிக் கம்பங்கள் வெட்டப்பட்டது உள்ளிட்ட வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், நேற்று நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு திமுகவினர் மட்டுமல்லாது, அவர்களுக்கு உதவியாக காவல்துறையினரும் இருந்தனர். இருவரும் கை கோர்த்து இந்த வன்முறையை அரங்கேற்றின.
தாக்குதல் தொடர்பாக நாங்கள் புகார் கொடுக்கச் சென்றபோது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்து விட்டது.
பாஜக தலைமைக் கழக அலுவலகம் மற்றும் பிற கிளை அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். பாசிச திமுக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.
எங்களது அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வன்முறை வெறியாட்டத்தில் அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றதால் சிபிஐ விசாரணை அவசியமாகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசைக் கலைக்க வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications