காங். பொதுச் செயலாளரானார் ராகுல் காந்தி
டெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக, ராஜீவ் காந்தி - சோனியா காந்தியின் மகனும், அமேதி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் அவர் வகிப்பார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இன்று முக்கிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.
அவர் வசம் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பும், தேசிய மாணவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
37 வயதாகும் ராகுல் காந்தி, ராஜீவ் - சோனியா தம்பதியின் இளைய மகன் ஆவார். அமேதி தொகுதியின் எம்.பியாகவும் இருக்கிறார்.
சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ராகுல் காந்தி, கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், தனக்கு கட்சியில் முக்கியப் ெபாறுப்பு வழங்கப்பட்டால் ஏற்று செயல்பட தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இருப்பினும் இன்னும் சிறிது காலம் ராகுல் காந்தி அனுபவம் பெறட்டும் என சோனியா காந்தி காத்திருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைய தலைமுறை தலைவர்களிடமும், மூத்த தலைவர்களிடமும் ராகுல் காந்திக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டதாலும், அவரை முக்கியப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்ததாலும், தற்போது அவருக்கு பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், லோக்சபாவுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற சூழல் வலுத்து வருவதால் இந்த நேரத்தில் ராகுல் காந்தியின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்திதான் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று கவனித்தார். தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோதிலும் கூட ராகுல் காந்தி சென்ற இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடியது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்களும் ராகுல் காந்திக்கு பொறுப்பு தரப்பட வேண்டும் என சோனியாவை வலியுறுத்தினர்.
இதன் எதிரொலியாக தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
ராகுல் காந்தி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.