நடுவானில் ஏசி ரிப்பேர்-மூச்சுத் திணறிய பயணிகள்-திரும்பி வந்த ஏர்டெக்கான் விமானம்
சென்னை:
சென்னையிலிருந்து விசாகப்பட்டனம் சென்ற ஏர் டெக்கான் விமானத்தில் திடீரென குளிர்சாதன வசதி செயல்படாததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
தனியார் விமானமான ஏர் டெக்கான் விமான சேவையில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் டெக்கான் விமானங்கள் மூலம் பயணிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இந் நிலையில் இன்று காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து விசாகப்பட்டனத்துக்கு பயணிகளுடன் விமானம் கிளம்பியது. கிளம்பிய அரை மணி நேரத்தில் விமானத்தின் குளிர்சாதன வசதி செயல்படவில்லை.
இதனால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பெண்கள் மற்றும் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து விமான ஊழியர்களிடம் பயணிகள் கூறியபோது, ஊர் வந்து விட்டது, போய் விடலாம், பொறுத்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் பயணிகள் மூச்சுத் திணறலால் பெரும் சிரமப்பட்டதை அறிந்த விமான நிலைமை மோசமாவதை உணர்ந்தார். இதையடுத்து உடனடியாக மீண்டும் சென்னைக்கே விமானம் திரும்பியது.
இதன் மூலம் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட விமான ஊழியர்களைக் கண்டித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். மேலும், மாற்று ஏற்பாடு செய்யப்படாமல் காலதாமதம் ஆனதாலும் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
பின்னர் வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பயணிகள் விசாகப்பட்டனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.