தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்: கோவையில் கருணாநிதி கொடும்பாவி எரிப்பு
சென்னை:
பாஜக அலுவலகங்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் முதல்வர் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக முன்னாள் எம்.பி. வேதாந்தி, முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டதால் திமுகவினர் வெகுண்டனர். வேதாந்தியைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அவர்கள் கடந்த 3 நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளான நேற்று முன்தினம், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இந்த செயலைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் இல.கணேசன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவையில் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட் வளாகம் உள்ளிட்ட இரு இடங்களில் பாஜகவினர், முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தனர்.
இதை போலீஸார் தடுக்க முயன்றபோது அவர்களுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸாரையும் மீறி அவர்கள் கொடும்பாவியைக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல நாகர்கோவில், நெல்லை, கும்பகோணம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications