நக்சல் சுந்தரமூர்த்தியின் 4 கூட்டாளிகள் கைது
மதுரை:
மதுரை மாவட்டத்தில் நக்சலைட் தலைவர் சுந்தரமூர்த்தி உள்லிட்டோருக்கு தங்க புகலிடம் கொடுத்த, சுந்தரமூர்த்தியின் நான்கு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம், முருகமலை வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்ற 4 நக்சலைட்டுகளையும், திருப்பூரில் பதுங்கியிருந்த நக்சல் தலைவர் சுந்தரமூர்த்தியையும் அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 1992ம் ஆண்டு மதுரை வந்த நக்சல் தலைவர் சுந்தரமூர்த்திக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள நக்சல் ஆதரவாளர்கள் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது.
இவர்களை பிடிக்க தர்மபுரியில் இருந்து டிஎஸ்பி லோகநாதன் தலைமையில் போலீசார் மதுரை வந்தனர். டிஎஸ்பி லோகநாதனுடன், மதுரை நகர கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார், சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்த ஆரப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியபாரி பெருமாள் (36), மலப்பட்டியைச் சேர்ந்த மன்மத ராஜா(56), திருப்பதி (55) மற்றும் போடியில் வசிக்கும் ரத்னவேல் (46) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் பெருமாள், திருப்பதி, மன்மதராஜா ஆகியோர் உழவர் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.