மதுரையில் கேபிள்கள் துண்டிப்பு: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கிப் பிடி
மதுரை:
மதுரை நகரில் கேபிள் டிவி வயர்கள் துண்டிக்கப்பட்டது தொடர்பாக காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சன் டிடிஎச் சேவையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் மதுரையில்தான் போராட்டம் படு உக்கிரமாக இருக்கிறது.
போராட்டம் வெடித்த தினத்தில், மதுரை நகரின் பல இடங்களில் கேபிள் டிவி வயர்களை சில விஷமிகள் துண்டித்தனர். இதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதனால் மதுரை நகரில் கடந்த சில நாட்களாகவே கேபிள் டிவி ஒளிபரப்பு சுமூகமாக இல்லை.
இந்த நிலையில் கேபிள்கள் வெட்டப்பட்டது தொடர்பாக ஆர்.என்.முருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், நாங்கள் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களாக இருந்து பல்வேறு கேபிள் ஆபரேட்டர்களுக்கு டிவி சேனல் வழங்கி வருகிறோம். இதற்காக மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதி பெற்று, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு டிவி சேனல்களின் ஒளிபரப்பை எங்களின் எம்.எஸ்.ஓ மூலமாக ஒளிபரப்பி வருகிறோம்.
கடந்த 20ம் தேதி இரவு 10 மணிக்கு தமிழ்நாடு கேபிள்டிவி ஆபரேட்டர் சங்கத் தலைவர், மதுரை மீடியா டிவி அசோக், யுனைட்டெட் டிவி ஆனந்த் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சில சமூக விரோதிகள் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் எங்களின் கேபிள் வயர்களை துண்டித்தனர்.
இது குறித்து கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தமிழக டிஜிபி, மதுரை காவல்துறை ஆணையருக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை மாநகர் முழுவதும் எங்களின் கேபிள் ஒளிபரப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புகார்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவும், எங்களின் கேபிள் டிவி மையம் மற்றும் உபகரணங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவும், சட்டபூர்வமான தொழிலில் யாரும் தலையிடுவதை தடுத்திடவும், எங்களைச் சார்ந்த விநியோகஸ்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அந்தப் பதிலை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.