3வது அணியிலிருந்து ஜெயலலிதா நீக்கம்?
டெல்லி:
பாஜக பக்கமாக ஒதுங்கி வரும் அதிமுகவை கூட்டணியிலிருந்து நீக்க 3வது அணித் தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
அதிமுக அல்லாத 3வது அணியை உருவாக்கி கூட்டணியை பலப்படுத்தவும் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சற்று முன்பு உருவானதுதான் 3வது அணி. இந்த அணி உருவாக முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் ஜெயலலிதா. அணியின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் ஜெயலலிதா வீட்டில்தான் நடந்தது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் கூடி ஆலோசித்து தங்களது அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் பெயர் சூட்டினார். இந்தப் பெயரை ஜெயலலிதாவே தனது வாயால் அறிவித்தார்.
ஆனால், கூட்டணி உருவான அதே வேகத்தில் பிளவுபட்டுப் போய்க் கிடக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க கூட்டணி முடிவு செய்தது. ஆனால் அதை தூக்கிப் போட்டு விட்ட அதிமுக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவுடன் நின்ற பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு கூட்டணியைக் கலைத்து விட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் சமாஜ்வாடிக் கட்சியைத் தாக்கினார் ஜெயலலிதா. நாங்கள் 3வது அணியில் இருக்கிறோமா இல்லையா என்பதே தெரியவில்லை என்றார்.
அதற்கு, பாஜக கூட்டணிக்கு ஜெயலலிதா முயற்சிப்பதாக சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளரான அமர்சிங் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் பாஜகவுடன் தனது நட்பை புதுப்பித்துக் கொண்டார் ஜெயலலிதா. அவரை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் சென்னைக்கு வந்து சந்தித்தார். அத்வானியும் வந்து சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந் நிலையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி அறிவிக்கவே, இந்த நிலையில் அத்வானியை சந்தித்தால் அது தன்னை சிறுபான்மையினரிடமிருந்து வெகு தூரம் கொண்டு போய் விடும் என்பதால் கோட நாடு எஸ்டேடுக்குப் போய்விட்டார் ஜெயலலிதா.
இருப்பினும், ராமர் பால பிரச்சினையில் பாஜகவுக்கு இணையாக ஜெயலலிதாவும் படு தீவிரமாக இருக்கிறார்.
ஜெயலலிதாவின் பாதை மாறி விட்டதால் அவரைக் கூட்டணியிலிருந்து நீக்கி விட 3வது அணித் தலைவர்கள் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் 3வது அணியின் முக்கியக் கூட்டம் ஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் நாளை நடக்கிறது.
இக்கூட்டத்தில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, அகில இந்திய லோக்தள தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா உள்ளிட்ட கூட்டணஇக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதை விட விசேஷமாக, புதிய தலைவர்களாக டெல்லி முன்னாள் முதல்வரும், முன்னாள் பாஜக மூத்த தலைவருமான மதன்லால் குராணா, முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரான உமாபாரதி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனால் 3வது அணியின் அம்பாலா கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. இதன் மூலம் அவர் கூட்டணியிலிருந்து நீக்கப்படுவது உறுதியாகி விட்டது.
மேலும் ஜெயலலிதா இல்லாத 3வது அணியை உருவாக்கி, முன்பை விட தீவிரமாக செயல்படவும் 3வது அணித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.