சேது: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி
சென்னை:
சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு முழு திருப்தி தரும் வகையில் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் திமுக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இரண்டரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தும் அமைச்சராக மத்திய அரசில் இருக்கும் நிலையில், மத்திய அரசை எதிர்த்து பந்த் நடத்துவது சரியாக இருக்குமா?
கருணாநிதி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு மதவாத சக்திகள் உருவாக்கும் தடைகளைப் பொருட்படுத்தாமல், இத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தித்தான் இந்த பந்த். மேலும் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவே இந்த முழு அடைப்புப் போராட்டம்.
மதவாத சக்திகளின் உள்நோக்கத்தை எதிர்த்தே இதை நடத்துகிறோம். மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை.
கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசின் செயல்பாடு திருப்தி தருவதாக உள்ளதா அல்லது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதா?
கருணாநிதி: ஏமாற்றம் அளிப்பதாகவும் இல்லை, முழு திருப்தி தருவதாகவும் இல்லை. எனவேதான் பந்த் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்துகிறோம்.
கேள்வி: ஓட்டு வங்கியை மனதில் கொண்டு, சேது விவகாரத்தில் காங்கிரஸ் நடப்பதாக நினைக்கிறீர்களா?
கருணாநிதி: இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை ஆதரிக்கிறீர்களா
கருணாநிதி: திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையிலும் மாற்றம் இல்லை. டி.ஆர்.பாலுவும் இதை தெளிவாக கூறியிருக்கிறார்.
கேள்வி: ராமர் பாலத்தை இடிக்க விட மாட்டோம். அப்படியே மீறி இடித்தால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அந்த அதிகாரிகளை தண்டிக்காமல் விட மாட்டோம் என உமாபாரதி பேசியுள்ளாரே..
கருணாநிதி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு பாஜக கூட்டணி அரசு அனுமதி அளித்தபோது, அந்த அமைச்சரவையில் உமாபாரதியும் இடம் பெற்றிருந்தார்.
கேள்வி: திமுகவுடன் சித்தாந்தப் போர் தொடங்கியிருப்பதாக இல.கணேசன் கூறியுள்ளாரே..
கருணாநிதி: அவர்கள் நிலைக்கு அவர்களால் போர் (ஆழ்துளைக் கிணறு) தான் போட முடியும். போரிட முடியாது.
கேள்வி: பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை மறுத்ததாதக பாஜக குற்றம் சாட்டியுள்ளதே..
கருணாநிதி: சிறிய விஷயத்தை பத்திரிக்கைகள்தான் பெரிதாக்குகின்றன. பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் தவறுதான். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கல் எறிந்ததைக் கண்டிக்கிறேன்.
கேள்வி: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புகிறீர்கள், ஆனால் ராமரை நம்ப மாட்டீர்களா என்று உங்களைப் பார்த்து விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே..
கருணாநிதி: எனது பூம்புகார் படத்தில் கடைசிக் காட்சியை எப்படி வைத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றார் கருணாநிதி.
பேட்டியின்போது நிதியமைச்சர் அன்பழகன், கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications