வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியானது; சின்னமனூர் கணேசன் முதலிடம்!
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாக கடந்தாண்டு நடத்தப்பட்ட வி.ஏ.ஓ. வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சின்னமனூரைச் சேர்ந்த இளைஞர் கணேசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
5 லட்சத்துக்கு அதிகமானவர்கள் எழுதிய விஏஓ பணிக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. இந்த பணிக்கு 2500 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
விடைத்தாள்கள் கம்ப்யூட்டர் மூலம் திருத்தப்பட்டு, அந்தப் பணி வீடியோவில் கண்காணிக்கப்பட்டது. எந்த தில்லுமுல்லுக்கும் இடம் தராமல் திருத்தும் பணி நடந்து முடிந்தது.
தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் காசி விஸ்வநாதன் கூறுகையில்,
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த என்.எம்.கணேசன் 300க்கு 283.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதில் குறைந்தபட்சமாக ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் 300க்கு 183 மதிப்பெண்கள் எடுத்து விஏஓ பணிக்கு தேர்வாகியுள்ளார்.
விஏஓ தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.
தேர்வு பெற்ற 2500 பேருக்கும் ஒரு வாரத்தில் தேர்ச்சி விபரம் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் அவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை தேர்வாணையத்தின் அலுவலகத்துக்கு கொண்டு வந்த பின்பு சரிபார்த்த பின்னர், மாவட்ட வாரியாக காலியிடம் இருப்பதை பொறுத்தும், ஏற்கனவே விண்ணப்பத்தில் அவர்கள் பணியிடம் கேட்டுள்ள இடம், பெற்றுள்ள மதிப்பெண் ஆகியவற்றை பொறுத்தும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
தேர்வில் முதலிடம் பிடித்துள்ள கணேசன், பி.எஸ்.சி படித்தவர். தற்போது சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 3 முறை தேர்வாணைய தேர்வுகளை எழுதியுள்ளார். ஆனால் இந்த முறைதான் வெற்றி பெற்றுள்ளார்.
லஞ்சம் வாங்காமல், ஏழைகளுக்காக உழைக்கப் போவதாக கணேசன் கூறியுள்ளார்.