குடிகார கணவன்- 3 குழந்தைகளை அரசுத் தொட்டிலில் சேர்க்க வந்த பெண்!
சேலம்:
குடிகார கணவனின் கொடுமை தாங்க முடியாமல், தனது 3 குழந்தைகளையும் அரசுத் தொட்டிலில் ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் நேற்று தனது மூன்று குழந்தைகளுடன் சேலம் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அந்தக் குழந்தைகளுக்கு ஐந்து முதல் 10 வயதுக்குள் இருக்கும்.
தொட்டில் குழந்தைத் திட்ட அதிகாரிகளைச் சந்தித்த அவர், எனது கணவர் குடிகாரர். வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுப்பதில்லை. எங்களையும் அடித்துத் துன்புறுத்துகிறார். என்னால் இந்தக் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. எனவே தயவு செய்து இவர்களை தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடி கூறினார்.
இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் சிசுக்களை மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்வோம் என்று கூறி மாரியம்மாளின் மூன்று குழந்தைகளையும் பெற முடியாது என மறுத்து விட்டனர்.
இருப்பினும் மாரியம்மாளின் துயர நிலையை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், அவர் தனது குழந்தைளை அரசினர் இல்லத்தில் சேர்த்து வளர்க்கலாம் என ஆலோசனை கூறி அதற்கான வழிமுறைகளையும் விளக்கி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications