'வெளிநாட்டு வேலை' மோசடி மன்னன் கைது
சென்னை:
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி சிறை சென்றவர் மீண்டும் அதே மோசடியைச் செய்து கைதாகியுள்ளார்.
சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம்.
இவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து 2003ம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதே மோசடியை ஆரம்பித்தார்.
அவரது விளம்பரங்களைப் பார்த்தவர்கள் பலரும் சரியாக விசாரிக்காமல் லட்சக்கணக்கில் பணம் கட்டினர்.
இதில் சிட்லபாக்கத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் என்பவரும் ஒருவர். இவருக்கு தென் ஆப்பிரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.46,000த்தை வாங்கினார் சண்முகம்.
அவருக்கு விசாவும் வாங்கித் தந்தார். ஆனால், அது போலியானது என்று தெரியவந்தது.
இவரைத் தவிர மேலும் 7 பேரிடமும் ரூ.1.5 லட்சம் வரை சுருட்டியுள்ளார்.
பணமும் தராமல் விசாவும் வாங்கித் தராமல் ஏமாற்றிய இவரை இந்த 8 பேரும் சேர்ந்து அவர் தங்கியிருந்த பெரியமேடு பகுதி விடுதியில் சென்று முற்றுகையிட்டனர்.
ஆனால், அவர்களை சண்முகம் மிரட்டியதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டினார். இதையடுத்து அவரை 8 பேரும் சேர்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதில் ரத்தக் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications