கோவில் உண்டியல்களில் எச்சரிக்கை 'அலார்ம்'
சென்னை:
கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம், நகைகளைத் திருடுவதைத் தடுக்க உண்டியல்களில் அபாய எச்சரிக்கை மணியை பொருத்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில்களில் களவு மற்றும் கொலை போன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உள்துறை அமைச்சர் மாலதி,
அறநிலையத்துறைச் செயலாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆணையர் பிச்சாண்டி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார், பொருளாதாரப் பிரிவு கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், காவல்துறை ஐஜி ஷா மற்றும் அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
சிலைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ள கோவில்களில் நவீன தொழில்நுட்பம் கொண்ட திருடர் எச்சரிக்கை மணி பொருத்தப்பட வேண்டும். உண்டியல்களுக்கு திருடர் எச்சரிக்கை மணிக்கான சென்சார் பொருத்தப்பட வேண்டும்.
இரவு நேர காவல் பணிக்கு திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
கோவில்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் இரவு நேரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும், அறநிலையத்துறையும் அவ்வப்போது கோவில் பாதுகாப்பு தொடர்பான பணிகளை உயர் அலுவலர்கள் நிலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications