கருணாநிதிக்கு கருப்புக் கொடி - தலித் அமைப்பு அறிவிப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைக்கு வரும் முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக புரட்சி தமிழகம் என்ற தலித் கட்சித் தலைவர் புரட்சி கவிதாசன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி அரசு நல திட்ட உதவிகள் வழங்க புதுக்கோட்டைக்கு வரும் 28 ம் தேதி வருகிறார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக புரட்சி கவிதாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக தேவேந்திர குல மக்களின் முக்கிய கோரிக்கைகளை எடுத்து கூற காத்திருந்தோம்.
இதை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் கோபாலபுரத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். முதல்வரை சந்திக்க அனுமதி அளிப்பதாக கூறி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். ஆனால் பின்னர் எங்களைக் கைது செய்து விட்டனர்.
இம்முறை நாங்ள் ஏமாறப் போவதில்லை. புதுக்கோட்டைக்கு வரும் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆதிதிராவிடர் அரசாணையை உடனே ரத்து செய்யவேண்டும். தஞ்சை ராஜராஜன் சோழன் சிலையை கோவில் உள்ளே வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார் அவர்