திமுக அரசைக் கலைக்கக் கோருவதா? பாஜகவுக்கு கருணாநிதி கண்டனம்!
திருச்சி:
பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக திமுக அரசைக் கலைக்கக் கோரும் பாஜகவின் கோரிக்கை கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக கோருவது கண்டனத்துக்குரியது.
ராமர் பாலம் தொடர்பான சர்ச்சை முடிந்து விட்டது. இனிமேல் அதுகுறித்துப் பேச விரும்பவில்லை.
தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கவில்லை. சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்தக் கூட்டத்தில், ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் பங்கேற்றது. பந்த் அமைதியான முறையில் நடைபெறும்.
தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழகத்தின் எந்தப் பகுதியையும் அரசு புறக்கணிக்கவில்லை.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களை நிறுவ தேவையான இடங்களை அரசு ஒதுக்கியுள்ளது.
நான்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.
பின்னர் புதுக்கோட்டை சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு 5வது கட்டமாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications