சாக்கடைத் தண்ணீரால் தகராறு - விவசாயி வெட்டிக் கொலை
ஒட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானை அடுத்து உள்ளது மஞ்சநாயக்கன்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் பிள்ளையார் நாயக்கர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி நாயக்கர். இருவரும் விவசாயிகள்.
சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாக இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவதன்று இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த வெள்ளைசாமி நாயக்கர் அரிவாளால் பிள்ளையார் நாயக்கரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பிள்ளையார் நாயக்கர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரயில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே பிள்ளையார் நாயக்கரை வெள்ளைசாமி நாயக்கர் வெட்டியது அவரது மகன்கள் செல்வகுமார். ஸ்ரீரங்கவேலு ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆத்திரத்துடன் வெள்ளைசாமி நாயக்கரிடம் சென்று தகராறு செய்தனர்.
அப்போது செல்வகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளைசாமி நாயக்கரை வெட்டினார். தடுக்க வந்த சுப்பையா என்பவருக்கும் அடி விழுந்தது.
பலத்த காயம் அடைந்த வெள்ளைசாமி நாயக்கரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பஸ்-கார் மோதி 2 பேர் பலி:
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் முகமது சர்புதீன். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் கண் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதையடுத்து கண் பரிசோதனைக்காக அவர்கள் நெல்லை புறப்பட்டனர். இதற்காக வடகரை ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்த அகமது என்பவரின் காரில் நெல்லை நோக்கி வந்தனர்.
காலை 6.50 மணியளவில் ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூற்றில் வந்தது. அப்போது நெல்லையில் இருந்து சுரண்டைக்கு ஒரு அரசு பஸ் வந்தது. அத்தியூற்றின் கீழ்புறம் உள்ள அபாய வளைவில் கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும்-காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் காரின் முன் பகுதி அப்பளமாக நொருங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி முகமது சர்புதீன், அகமது ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
கார்-லாரி மோதல் டிரைவர் பலி:
தூத்துக்குடி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் லாரி தீப்பிடித்தது. இதில் கார் டிரைவர் பலியானார்.
திருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ். தொழில் அதிபர். இவரும் சிவானந்தம் என்ற வாலிபரும் சாமி கும்பிடுவதற்காக காரில் திருச்செந்தூர் வந்தனர். அதை திருப்பூர் அடுத்த பெரியம்மா பட்டியை சேர்ந்த டிரைவர் கணபதி ஓட்டி வந்தார்.
அந்த கார் தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லைபகுதியான கோடாங்கிபட்டி அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த காரும் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு உப்பு ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின.
இதில் லாரி தீப்பிடித்த நாசமானது. இந்த விபத்தில் கார் டிரைவர் கணபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தொழிலதிபர் சுரேசும், சிவானந்தமும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications