பந்த்துக்கு தடை வருமா? அதிமுக மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
டெல்லி:
திமுக கூட்டணி நாளை நடத்தவுள்ள பந்த்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி சார்பில் நாளை பந்த் நடத்தப்படவுள்ளது. இதை எதிர்த்து அதிமுக, ஜனதாக் கட்சி மற்றும் டிராபிக் ராமசாமி என்கிற சமூக நல ஆர்வலர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுக கூட்டணியினர் நடத்துவது பந்த்தான். இருப்பினும் இதற்குத் தடை விதிக்க முடியாது. அதேசமயம், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வாலிடம் அதிமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி அகர்வால் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை இன்று சிறப்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இந்த மனுவில், உச்சநீதிமன்றத தீர்ப்புக்கு முரணாக இந்த பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திர வழக்கு நிலுவையில் உள்ளபோது பந்த் நடத்துவது தேவையற்றது.
இதனால் பெரும் வன்முறை மூளும். பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இந்த பந்த்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.